Friday, August 05, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -7

ஹுஸைன் இப்னு அலி [ரழி] அவர்கள் யஸிதுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்தபோது அதிகமான நபித்தோழர்கள் உயிர் வாழ்ந்தனர். தாபிஈ சட்ட அறிஞர்கள் எல்லோருமே அப்போது உயிர் வாழ்ந்தார்கள். ஆயினும் எந்த ஸஹாபியும் தாபிஈயும் ஹுஸைன் [ரழி] அவர்களின் செயற்பாட்டை ஹராம் என்று சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால் ஹுஸைன் [ரழி] அவர்கள் போராடச் செல்வதை தடுத்தார்கள். காரணம் 'ஈராக்வாசிகள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல; போராட்டம் பல அபாயங்களைக் கொண்டது. அது வெற்றியடையும் சாத்தியம் மிகக் குறைவு' என்றுதான் தடுத்தார்கள். அநியாயக்காரர்களுக்கு எதிராக, வழிபிறழ்வோருக்கெதிராக போராடல் சட்டரீதியானது. எனினும் போராடும் முன்னர், வெற்றிசாத்தியமானதுதானா? குறித்த இலக்கை அடைந்து கொள்ள முடியுமா? வழிபிறழ்ந்த ஆட்சியை அகற்றியதன் பின்னர் சிறந்த ஆட்சியொன்றை அமைப்பது சாத்தியம்தானா? என்பவற்றை உறுதிப்படுத்தலும் திட்டமிட்டுக் கொள்ளலும் மிக அவசியமாகும். இந்த வகையில் ஸஹாபாக்கள் சிலர் ஹுஸைன் [ரழி] அவர்களோடு கருத்து வேறுபட்டிருப்பின் அது திட்டமிடல், விளைவு சாத்தியப்பாடு என்பன குறித்ததாக அமைந்ததே தவிர போராட்டம் ஆகுமானதா இல்லையா என்பது குறித்தல்ல.

ஹஜ்ஜாஜின் அத்துமீறிய ஆட்சியின்போது அப்துர் ரஹ்மான் அல் அஸ் அத்தின் தலைமையில் நடந்த புரட்சியையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். இப்புரட்சியின்போது ஸளீத் இப்னு ஸுபைர், ஷஃபி இப்னு அபி லைலா அபுல் புக்திரி போன்ற பல பெரும் சட்ட அறிஞர்களைக் கொண்ட ஓர் இராணுவப் பிரிவு இப்னு அஸ் அதுக்குச் சார்பாக நின்றதாக இப்னு கஸிர் குறிப்பிடுகின்றர்.

இப்போராட்டத்தில் கலந்து கொள்ளாது ஓதுங்கிக் கொண்ட எந்த அறிஞரும் இப்புரட்சியை ஆகுமானதல்ல எனக் கூறவில்லை. போரில் கலந்து கொண்ட சட்ட நிபுணர்கள் அஸ் அதின் படைமுன் நிகழ்த்திய உரைகள் இது அனுமதிக்கப்பட்டசெயல் என்பதைக் காட்டுகின்றன.

ஹஜ்ஜாஜின் காலப்பிரிரிவில் மக்காவில் புரட்சி செய்த இப்னு ஸுபைரின் செயர்பாடும் இதற்கு இன்னொரு உதாரணமாகும். இவ்வாறு ஆரம்பகால அறிஞர்கள் அநியாயக்கார ஆட்சிக்கெதிராக ஆயுதப் புரட்சி செய்தல் அனுமதிக்கப்பட்டது என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். எனினும் இப்னு அஸ் அதின் புரட்சியின்போது சிறைபிடிக்கப்பட்ட ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் பசியலும் தாகத்திலும் விடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இப்னு ஸுபைரின் புரட்சியின் போது 'மன் ஜனீக்' என்ற போர்க் கருவி மூலம் கஃபா தாக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர்.

இமாம் அபூ ஹனீபா ஆயுதப் போராட்டத்தின்போது இத்தகைய மோசமான விளைவுகள் உருவாகலாம் என எதிர்பார்க்கவில்லை. ஆயினும் இப்புரட்சிகளின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் சக்தியை வீணாக அழிப்பதும் பெருந்தொகையானோர் கொல்லப்படலும் மட்டுமே நிகழ்ந்தது. எனவே மாற்றத்திற்கு வழி ஆயுதப் போராட்டமே என்ற முதலாம் நூற்றாண்டு அறிஞர்கள் கொண்டிருந்த கருத்து மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முதலாம் நூற்றாண்டில் பிறந்த அபூ ஹனீபாவும் அக்கருத்தையே கொண்டிருந்தார்களெனினும் இமாம் அபூ ஹனீபாவின் சிந்தனைப் பாதிப்புக்குட்பட்ட அபூ யூசூப் போன்ற அவரது மாணவர்கள் அபூ ஹனீபாவின் இக்கருத்துப் போக்கினைக் கொண்டிருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். புரட்சிகளின் விளைவுகள் தந்த பாடத்தினால் முஸ்லிம் சமூகத்தில் இன்னொரு கருத்து தோன்றலாயிற்று. இக்கருத்தே அஹ்லுஸ் ஸுன்னாவின் பொதுக் கருத்து என அழைக்கப்படுகின்றது.

ஆயுதப் போராட்டத்திற்கு மாற்றமான இக்கருத்து தோன்றுவதற்கு முதலாம் நூற்றாண்டின் சட்ட அறிஞர்களுக்குப் புரியாமல் போன சில திட்டவட்டமான அல் குர்ஆன், ஸுன்னாவின் ஆதாரங்களே காரணமாயின என்று ஒரு போதும் கூற முடியாது. ஆட்சி மாற்றத்திற்குப் பிரயோகிக்கப்பட்ட வன்முறை வழிமுறை அடைந்த தொடர் தோல்விகளும் அதன் விளைவாக உருவான பாரிய உயிர் அழிவும் பல்வேறு குழப்ப நிலைகளுமே இவ்விரண்டாம் கருத்து தோன்றக் காரணமாயின.

இந்தவகையில் புதிய மாற்றங்களுக்கும் புரட்சிகளால் நிகழ்ந்த சமூக விளைவுகளுக்கும் ஏற்ப புதியதொரு கருத்தை முன்வைக்கும் வகையில் இமாம் மாலிக் அடுத்து தோன்றுகின்றார்.


இறைவன் நாடினால் வளரும்....

No comments: