Friday, August 05, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -6

இமாம் அபூ ஹனீபா நப்ஸ் ஜகிய்யாவின் சகோதரர் இப்றாஹீமுக்கு பைஅத் செய்யுமாறு தூண்டி வந்தார். அவரோடு போராட இணைந்து கொள்வது ஸுன்னத்தான ஹஜ்ஜுக்குச் செல்வதைவிட உயர்ந்தது என பத்வா வழங்கினார். ஹனபி மத்ஹபின் உயர்ந்த சட்ட அறிஞர்களான இமாம் ஜஸ்ஸாஸ், மக்கீ," பத்வா பஜாஜிய்யா" என்ற நூலின் ஆசிரியர் ஆகியோர் இமாம் அபூ ஹனீபாவின் கீழ்வரும் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். "முஸ்லிம் சமூகத்திற்கு வெளியே நிராகரிப்பாளர்களோடு போராடுவதைவிட, முஸ்லிம் சமூகத்தை அதனுள்ளே காணப்படும் நெறிபிறழ்வுகளிலிருந்து விடுதலை செய்யப் போராடுவது சிறந்தது."

ஆபுபக்கர் அல் ஜஸ்ஸாஸ் தமது அஹ்காமுல் குர்ஆன் என்ற நூலில் கீழ்வருமாறு கூறுகிறார்; அநியாயங்களோடும் அநியாய ஆட்சியாளர்களோடும் போராடுவது குறித்த அவரது கருத்து பிரபல்யமானது. எனவேதான் இமாம் அவ்ஸாஇ 'அபூ ஹனீபாவின் எல்லா விடயங்களையும் நாம் ஏற்றோம்; சகித்துக் கொண்டோம். கடைசியில் அவர் வாள் தூக்குவது பற்றிய கருத்தைக் கொண்டு வந்தார். அந்நிலையில் அவரை எம்மால் எற்க, சகிக்க, முடியாமல் போய்விட்டது' என்கிறார் [அஹ்காமுல் குர் ஆன் வா- 1, பக்.81]

நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதை வாயால் செய்வது கடமையாகும். அது ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் வாளால் தீமையைத் தடுக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. [அஹ்காமுல் குர் ஆன், வா- 1, பக்.81]. அதாவது உபதேசமும் நற்போதனைகளும் பயன்படாதபோது பரிகாரம் என்ற கருத்தை அபூ ஹனீபா கொண்டிருந்தார்.

இது இமாம் அபூ ஹனீபா மட்டும் கொண்டிருந்த கருத்தல்ல. இப்னு ஹஜர் பத்ஹுல் பாரியில் குறிப்பது போன்று இது ஆரம்பகால அறிஞர்களின் கருத்தாகவும் இருந்தது. ஹிஜ்ரி முதாலம் நூற்றாண்டில் வாழ்ந்த அஹ்லுஸ் ஸூன்னா வல் ஜமாஅத்தைச் சேர்ந்த பேரறிஞர்களின் கருத்தாகவும் இருந்தது.

அபூபக்கர் [ரழி] அவர்கள் கலீபாவாக பை அத் செய்யப்பட்ட பின்னர் நிகழ்த்திய முதலாவது உரையில் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்; 'அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நான் வழிப்பட்டு நடக்கும் வரை எனக்குக் கட்டுப்படுங்கள். நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தால் எனக்குக்கட்டுப்பட்டு நடப்பது உங்களுக்கு கடமையன்று' [ஸுரா;இப்னு ஹிஷாம் வா௪, பக்- 211]

உமர்[ரழி] அவர்கள்கீழ்வாருமாறு கூறுகின்றார்; 'யார் முஸ்லிம்களின் ஆலோசனையின்றி ஒரு தலைவருக்கு பைஅத் செய்கின்றாரோ அந்த பைஅத் செய்யப்பட்டவருக்கு பைஅத் செல்லுபடியாகாது. அத்தோடு பைஅத் செய்தவர்களின் பைஅத்தும் நிறைவேறாது' (முஸ்னத் அஹ்மத் வா- 1, பக்- 391).

இறைவன் நாடினால் வளரும்....

No comments: