Thursday, March 09, 2006

இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! (10)

கல்விக்கு ஏற்பாடின்மை.

மேலே நாம் கூறியது போல முடியரசின் கீழ் இஸ்லாமிய ஒழியைப் பரப்பும் பெரும்பணி தனி மனிதர்களின் பொறுப்பாக மாறிற்று. உலமா, சூபிப் பெருமக்கள், ஏன் வர்த்தகர்களும் கூடக் காட்டிய பேரார்வத்தின் காரணமாகத் தொடர்ந்து இஸ்லாத்தின் பால் பலர் கவரப்பட்டு வந்தனர். ஒரு காலத்தில் பேரருவியாக ஓடிக் கொண்டிருந்த புது முஸ்லிம்களின் பெருக்கம் நாளடைவில் சிற்றோடையாகச் சுருங்கிற்று. ஆனால் அது ஒரு போதும் வற்றி வரண்டு விடவில்லை.

அரசர்களின் ஆதரவு கிடைக்காவிடினும் இஸ்லாம் தொடர்ந்து பரவலாயிற்று. இதற்குக் காரணம் அதன் உள்ளார்ந்த நற்பண்பும் சில பக்திமிக்க முஸ்லிம்களின் சேவையுமாகும். இவர்கள் தாம் பெற்ற அருட் கொடையினை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆசையினால் உந்தப்பட்டனர். முஸ்லிம் அல்லாத ஒவ்வொருவருக்கும் இஸ்லாத்தின் தூதினை எடுத்தியம்ப வேண்டும் என்ற பேரார்வம் அவர்களிடையே எப்பொழுதும் சுடர்விட்டுக் கொண்டிருந்தது.

அவர்களிடையே சன்மார்க்க அறிஞர்களும், மறுவுலக பற்றுமிக்க ஆத்ம ஞானிகளும் மட்டுமின்றி சாதாரண முஸ்லிம்களும் இருந்தனர். அவர்கள் தம் முயற்சிகளை ஒருமுகப் படுத்த முயற்சி செய்யவில்லை. தம்மை ஒரு பிரச்சார சபையாக அமைத்துக் கொள்ளவுமில்லை. ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த சிறு வளத்தைப் பயன்படுத்தி தாமாகவே இயங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு கிடைத்த ஒரே வெகுமதி, இஸ்லாத்தின் ஒப்புயர்வில்லாத அரும்போதனைகளைப் புதியவர்களுக்கு எடுத்துரைத்த திருப்தி ஒன்றேயாகும்.

புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு மிக விரிவான அளவில் கல்வியும், இஸ்லாமிய பயிற்சியும் அளிப்பது அவசியமாக இருந்தது. ஆனால் அதற்கு ஏற்பாடு செய்ய அவர்கள் சக்தி பெற்றிருக்கவில்லை. அதற்குத் தேவையான வளங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. அது அரசாங்கத்தின் கடமையாகும். இஸ்லாத்தைப் புதிதாகத் தளுவியவர்களுக்கு இஸ்லாமிய கொள்கை பற்றிய அறிவூட்டுவதற்கான ஒரு பயிற்சி நெறியை அளிப்பதற்குத் தேவையான வளம் அரசாங்கத்திடம் இருந்தது. அவ்வாறு செய்திருந்தால் இஸ்லாம் புதிய முஸ்லிம்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்திருக்கும். இவ்விடயத்தில் முஸ்லிம் அரசர்களின் கீழிருந்த அரசாங்கங்கள் அக்கறை காட்டாது விட்டமை பெருங்குற்றமாகும்.

பெரும்பாலான முஸ்லிம் அரசர்கள் ஓர் இடாம்பீக, ஏன் பாவத்தில் திளைத்து இன்பம் காணும் வாழ்க்கைக்கு முன்மாதிரியாக வாழ்ந்தனர். இதனால் இஸ்லாம் பிறருக்குத் தாழ்வானதாகக் காட்சி நல்கியது.

செல்வம் படைத்த சில முஸ்லிம்கள், முஸ்லிம் பொது மக்களின் கல்விக்கு ஏற்பாடு செய்தனர் என்பது உண்மையே. அவர்கள் கல்வித்தாபனங்களை நிறுவி அவற்றை நடத்துவதற்காக சொத்துக்களையும் அறக்கொடைகளாக வழங்கினர்.

எனினும் கல்வியைப் பரப்புவதில் ஆர்வம் கொண்ட தாராள மனம் படைத்தவர்கள் நிறுவிய ஒரு சில கல்வித்தாபனங்கள், பெருந்தொகையான குடிமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதியனவாக இருக்கவில்லை. அன்றியும் புது முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைகள் பற்றி அறிவூட்டுவதற்கு அவசியமான விசேட ஒழுங்குகளும் செய்யப்படவில்லை.

வளரும் - இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.

No comments: