Wednesday, October 27, 2010

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -5

எனினும், இமாம் ஸைதின் புரட்சி 123இல் அவர் கொலை செய்யப்பட்டதோடு முடிவுற்றது. அவருக்குப் பின்னர் அவரது மகன் யஹ்யா ஹிஜ்ரி125இல் குராசானில் புரட்சியை ஆரம்பித்து அவரும் தந்தையைப் போல் கொலையுண்டார். பின்னர் அப்துல்லாஹ் இப்னு யஹ்யா தன் பெற்றோர்களின் உரிமையைக் கோரி போராட்டத்தை ஆரம்பித்தார். உமையா ஆட்சியின் இறுதிக் கலீபா மர்வான் இப்னு முஹம்மத் அனுப்பிய படைகளோடு இவர் யெமனில் மோதினார். எனினும், ஹிஜிரி 130இல் தனது பெற்றோர் போன்றே இவரும் ஷஹீதானார். அத்தோடு வேதனை மிக்க இந்த வரலாற்றுப் பக்கம் உண்மையாகவே மூடுண்டு போனது.

ஸைத் இப்னு அலி [ரழி] இமாம் அபூ ஹனீபாவின் உள்ளத்தில் பெற்றிருந்த உயர்ந்த அந்தஸ்தை மேலே விளக்கியவற்றிலிருந்து புரிந்து கொள்ளமுடியும். இமாம் ஸைதின் போராட்டத்தை இறைத்தூதர் [ஸல்] அவர்களின் பத்ர் போருடன் ஒப்பிடும் அளவுக்கு இமாம் அபூ ஹனீபா சொன்னார்கள் என ஏற்கனவே கண்டோம்.

ஸைத் இப்னு அலியின் அறிவு, ஒழுக்க, மார்க்க உணர்வு என்பவற்றை இமாம் அவர்கள் உணர்ந்து மதித்தார். ஸைதை தலைமைக்குத் தகுதிமிக்க சத்திய இமாமாகவே அபூ ஹனீபா கருதினார். போரில் பங்குகொள்ளாதவன் என்ற பெயர் தனக்கு வரக்கூடாது என்பதற்காக செல்வத்தின் மூலம் போராட்டத்திற்கு உதவவும் செய்தார். எனினும், அவரும் அவருக்குப் பின்னால் அவரது மகனும் அவருக்குப் பின்னால் அவரது பேரனும் கொல்லப்பட்டமையை இமாம் பார்க்க வேண்டியதாயிற்று. இது அவர்களுக்கு மிகுந்த ஆத்திரத்தைக் கொடுத்தது. எனவே நடந்த இவ்வநியாயங்கள் குறித்து அவரது நாவு பேசியது. கோபங்கொண்ட அறிஞர்களது நாவுகள் கொடுவாள் செய்யாதவற்றையும் செய்யும். அரசனின் வாளைவிட நாவின் தாக்குதல் மிகப்பலம் வாய்ந்தது.

இமாம் அபூ ஹனீபாவின் நடத்தை அவர் கொள்கை ரீதியாக இப்பிரச்சினையில் கொண்டிருந்த கருத்துக்கு உடன்பாடாக உள்ளது. இமாம் ஸைத் கூபாவில் இருந்து புரட்சியை ஆரம்பித்தார். கூபா மக்களின் மனோநிலையையும் அவர்கள் அலி [ரழி] அவர்களோடு நடந்து கொண்ட முறையையும் இடைநடுவே ஹுஸைன் [ரழி] அவர்களைக் கைவிட்டமையையும் இமாம் அபூஹனீபா நன்கறிந்திருந்தார்.

இமாம் ஸைத் ஆரம்பித்திருந்த இயக்கம் கூபாவில் மட்டுமே பரவியிருந்தது. நன்கு பலம் பெறும் அளவு வேறு பகுதிகளுக்கு அது பரவியிருக்கவில்லை. இயக்கத்தைத் துவங்கி ஆறு மாதங்கள் மட்டுமே சென்றிருந்தது. இக்காலப் பிரிவு பரவலுக்கோ இயக்க முதிர்ச்சிக்கோ போதுமானதல்ல. இக்காரணங்களால்தான் பல அறிஞர்களும் இமாம் ஸைதை எச்சரித்தார்கள். போராட்டத்தை துவங்குவதையும் தடுக்க முயன்றார்கள். இவற்றையெல்லாம் கண்ட இமாம் அபூ ஹனீபா இப்புரட்சியின் வெற்றி குறித்து நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

அடுத்தபோராட்ட முயற்சியை "நப்ஸ் ஜகிய்யா" என அழைக்கப்பட்ட முஹம்மத் இப்னு அப்துல்லாஹ்வும் அவரது சகோதரர் இப்றாஹீமும் ஆரம்பித்தனர். இவர்கள் ஹுஸைன் [ரழி] அவர்களின் பிள்ளைகளாவர். இப்போராட்டம் ஹிஜ்ரி 145இல் நடைபெற்றது. அப்போது இமாம் அபூ ஹனீபா சமூகத்தில் பெரும் செல்வாக்கும் உயர்ந்த அந்தஸ்தும் பெற்றிருந்தார்.

இம்முறை இமாம் அபூ ஹனீபாவின் நிலைப்பாடு முன்பை விட முற்றிலும் வித்தியாசமாக அமைந்திருந்தது. அபூஹனீபா இம்முறை இந்த இயக்கத்திற்குப் பகிரங்கமாகவே உதவினார். தமது வகுப்புகளில் தாம் இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாகவே பேசினார். கலீபா மன்சூரின் தளபதிகள் சிலரை நப்ஸ் ஜகிய்யாவோடு போராடச் செல்வதை தடுத்து நிறுத்தும் அளவுக்கு இமாமின் செல்வாக்கு சென்றது. அப்போது கலீபா மன்சூர் கூபாவில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இமாம் அபூ ஹனீபாவின் மாணவர்கள் தாம் அனைவருமே கைது செய்யப்பட்டு விடுவோமோ என்று கூடப் பயந்தார்கள்.இறைவன் நாடினால் வளரும்....நூலாசிரியர் பற்றி... | முன்னுரை | பதிப்புரை | முந்தைய பகுதி

No comments: