Sunday, November 05, 2006

இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! (21)

துனூசியாவை எடுத்துக் கொள்வோம். துனூசியர் இஸ்லாத்திற்காகப் போரிட்டு வெற்றியீட்டினர். சுதந்திரம் பெற்ற பின் ரமழான் மாதத்தில் தொழிலாளர் நோன்பு நோற்றல் உற்பத்தி குறைந்து விடும் என்று போர்கிபா உறுதியாக மக்களுக்கு எடுத்துரைத்தார். இவ்வறிவுரையை வழங்குவதில் போர்கிபா கம்யூனிஸ்டுகளைப் பின்பற்றினார். ரஷ்ய முஸ்லிம்கள் இதே காரணத்திற்காகத் தான் ரமழானில் நோன்பு வைப்பதிலிருந்து தடுக்கப்பட்டனர்.

துருக்கி யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டபொழுது அதன் ஒரே நோக்கம் துருக்கியில் இஸ்லாம் வாழ வேண்டும் என்பதே என்று துருக்கி மக்களுக்கு கமால் உறுதியளித்தார். ஆனால் வெற்றி கிடைத்த பின் கமால் செய்த பிரகடனங்கள் எவற்றிலும் இஸ்லாம்பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இஸ்லாத்தின் பெயரில் வேண்டுகோள் விடுத்ததனால் இத்தலைவர்கள் தம் நாட்டு மக்களிடமிருந்த அளவிடற்கரிய பெரும் சக்தியை ஒன்று திரட்டிப் பயன்படுத்த முடிந்தது. ஆனால் பதவிகளில் தம் நிலை உறுதியாகி இஸ்லாத்தின் உதவி இனித் தேவையில்லை என்று அவர்கள் கருதிய போது அதனை எளிதாகவே மறந்து விட்டனர்.

இப்பொழுது முஸ்லிம் நாடுகளின் ஆட்சிக் கடிவாளம் இஸ்லாத்தைக் கிஞ்சிற்றும் மதியாதவர்களதும் அதன் குறிக்கோள்கள், இலட்சியங்கள் மீது எள்ளளவும் அனுதாபமற்றவர்களதும் கைகளில் இருக்கின்றது. எனினும் முஸ்லிம் சமுதாயத்தில் ஆலிம்களைக் கொண்ட மற்றொரு பகுதி இருக்கின்றது. அவர்கள் இஸ்லாத்தில் பற்று மிக்கவர்களாகவே இருந்து வந்துள்ளனர். இஸ்லாத்தின் மீது அவர்களுக்குள்ள பேரார்வம் எப்பொழுதும் குறைந்ததில்லை. இஸ்லாமியப் போதனைகளில் அவர்களுக்குள்ள அக்கறை என்றும் ஒன்று போலவே இருந்து வருகிறது. அவர்கள் இஸ்லாத்தின் போதனைகளை விளங்கி அவற்றை மற்றவர்களுக்கு விளக்கும் ஆற்றல் பெற்றுள்ளனர். மக்கள் அவர்களை இஸ்லாத்தின் உண்மைப் பிரதிநிதிகளாகக் கருதி பெருமதிப்பு அளிக்கின்றனர்.

ஆனால் அரசில் அவர்களுக்குள்ள செல்வாக்குப் பொருட்படுத்தத் தக்கதல்ல. ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்களின் கையிலிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு அவர்கள் சக்தி பெற்றவர்களல்லர். மக்களுக்கு இவ்வாலிம்களின் நேர்மையில் நம்பிக்கை உண்டு. ஆனால் ஒரு நவீன அரசாங்கத்தை நடத்துவதற்கு அவர்களுக்குத் திறமை இருக்கிறது என்பதை மக்கள் சந்தேகிக்கின்றனர். மக்களின் இவ்வையப்பாட்டிற்குத் தகுந்த காரணமும் உண்டு. தற்கால அரசொன்றை நடத்துவதற்கு அவசியமான சிறப்பறிவு அவர்களுக்கில்லை என்பதை மக்கள் அறிவர். எனவே முஸ்லிம் நாடுகளின் மக்கள் இரண்டுங்கெட்ட இக்கட்டானதொரு நிலையில் சிக்கித் தவிக்கின்றனர்.

வளரும் - இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.

No comments: